இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட்களுக்கும், இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உண்டு. தங்களின் வன்முறை செயல்திட்டங்களை அமல்படுத்த மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெறுகின்றனர்,” என ஆந்திர மாநில டி.ஜி.பி., கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை விடுதலைப் புலிகள், இங்குள்ள மாவோயிஸ்ட்களுக்கு உதவி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாவோயிஸ்ட்களுக்கு ஆயுத உதவி மற்றும் பயிற்சி போன்றவற்றை விடுதலைப் புலிகள் அளிக்கின்றனர்.நாட்டின் மத்திய பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்ட்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இணைந்த கூட்டுப் பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் நடந்ததாக புலனாய்வுத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.
புலனாய்வுத் துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, விடுதலைப் புலிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள, “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள, மாவோயிஸ்ட்கள் கொரில்லா போரில் தேர்ச்சி பெற்ற விடுதலைப் புலிகளின் உதவியைக் கோர லாம் என நம்பப்படுகிறது.
ஆந்திர மாநிலம் முன்னர் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக இருந்தது. அந்த நிலையை அவர்கள் திரும்பப் பெற முடியாது. சட்டீஸ்கர்,பிற மாநிலங்களில், மாவோயிஸ்ட்களுக்கு எதிரானதாக்குதல்கள் நடத்தப்படுவதால், அவர்கள் ஆந்திராவிற்குள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், எல்லையில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.கடலோரப் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைத்து, அப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீண்டும் இங்கு செயல்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு கிரிஷ் குமார் கூறினார்.